வெள்ளி, 30 மார்ச், 2012

மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு: சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற பொலிஸாருக்கு உத்தரவு

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதகரகமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்றபோது வைத்தியரினால் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுமாறு கொள்ளுபிட்டிய பொலிஸாருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


இது தொடர்பான வழக்கு கோட்டை  நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேற்படி வைத்தியர் கைது செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவ்வைத்தியர், மருத்துவ தேவைக்காக அவ்வாறு நடந்துகொண்டாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையில் ஏற்பட்ட நோவிற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள தனியார் மருத்துவமனையொன்றை நாடியபோது  வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக அப்பெண்  கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.    

கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு தான் சென்றதாகவும் மருத்துவமனையில், சோதனை அறையொன்றுக்கு தான் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அங்கு வைத்தியர் ஒருவர் தன்னை முறையற்ற விதமாக தொட்டதன்மூலம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்த சோதனை அறையில் பெண் தாதியர் எவரும் இருக்கவில்லை யென்றும் வைத்தியர் இவ்வாறான விதமமாக சோதனை மேற்கொள்கிறார் என்பது புரியாமல் தான் சங்கடத்துக்குள்ளானதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பான விசாரணைக் குறிப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு நீதவான் கனிஷ்க விஜேரட்ன பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.