வெள்ளி, 14 செப்டம்பர், 2012

சிறுநீரகத்தை கீறி கல்லை அகற்றும் அறுவை சிகிச்சை!

உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்குன்னு யாரிட மாவது கூறினால் உடனடியாக அவர் கேட்கும் கேள்வி ஏன் டாக்டர் கல்லை அறுவை சிகிச்சை இல்லாம கரைக்க முடியுமான்னு தான். இன்னும் ஊசி போடவே பயப்படும் ஆட்கள் இருக்கும் போது, அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டுமென்றால் பயப்படாமல் இருப்பார்களா?

மருத்துவ சிகிச்சைகள்: மாற்று மருத்துவ முறைகளில் சிறுநீரக கற்களை கரைப்பதற்கென பல்வேறு மருந்துகளையும் கொடுக்கிறார்கள். இவற்றால் பெரிய பயன் விளைந்ததாக இதுவரை தெரியவில்லை.

இதில் முக்கியமானது சிஸ்டோன் என்ற மருந்தாகும். சிஸ்டைன் யூரேட் வகை கற்கள் அமிலத்தன்மையில் உருவாகுவதால் சிஸ்டைன், கற்கள் காரத்தன்மை கொண்ட சிறுநீரால் வெளியேறும் வாய்ப்பு அதிகம். எனவே இவர்களுக்கு சோடியம் பைகார்பனேட், சோடியம் சிட்ரேட் ஆகிய மருந்துகள் உதவும். அதே போல, பாஸ்பேட் வகை கற்கள் காரத்தன்மை மிக்க சிறுநீரிலிருந்து உருவாகுவதால், இவர்களுக்கு சிறுநீரை அமிலத்தன்மை கொண்டதாக மாற்ற அயோடின் குளோரைடு கொடுக்கலாம். முன்பு இதற்காக திரவம் பயன்படுத்தப்பட்டது.

நவீன மருத்துவத்தில் சிறுநீரகங்கள் உடையவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிப்பதில்லை. ஏனென்றால் கல்லின் அளவை பொருத்தும், அது எந்த வகை கல் என்பதை பொருத்தும், அது எந்த இடத்தில் என்பதை பொருத்தும் சிகிச்சை மாறுபடும். பொதுவாக சிறுநீரகங்களிலும், சிறுநீரை வெளியேற்றும் குழாய்களிலும் கற்கள் ஏற்பட்டால் அதனை கரைத்து வெளியேற்றுவதற்கு சிறந்த மருந்துகள் எந்த மருத்துவத்திலும் இல்லை என்பது தான் உண்மை.

இதற்காக சாப்பிடப்படும் மருந்து உட்கிரகிக்கப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலந்து, அதன் மூலம் சிறுநீரகத்தை அடைந்து அங்குள்ள கற்களை கரைக்கும் தன்மையை பெற்றிருக்க வேண்டும். இது வரை மருந்தின் மூலம் சிறுநீரக கற்களை கரைத்தவர்கள் எவருமில்லை.

சிறு நுண்துகள் கற்கள் வெளியேற்ற சிகிச்சைகள்:

நவீன மருத்துவத்தில் சிறுநீரக நோய்க்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. ஆனால் இது கற்களை கரைப்பதற்கு அல்ல. மீண்டும் கற்கள் ஏற்படாமல் வகை செய்யவும் ஏற்பட்ட சிறு சிறு நுண்ணிய கற்துகள்களை வெளியேற்றவும் தான் (0.5 செ.மீ. சிறிய கற்கள்) பொதுவாக குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கோடை கால வெப்பத்தினாலும் வெயிலினாலும் சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி விடுவதால் அதிலுள்ள பல்வேறு உப்புகளும் கற்களாக படிந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

எனவே தினமும் வழக்கத்தை விட அதிகமாக நீர் அருந்த வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மூன்று லிட்டர் வீதம் தினமும் குடிக்கலாம். சிலருக்கு மிகச்சிறிய நுண்ணிய கற்கள் இருந்தால் ரத்தக்குழாய் வழியாக அதிக அளவு குளுக்கோஸ் திரவத்தை செலுத்துவதால் சிறுநீர் மிகுதியாக வெளிப்படுவதுடன் சிறுநீரின் அடர்த்தியும் குறைவாக இருக்கும்.
இதன் காரணமாக பல கற்துகள்களும், சிறிய நுண்ணிய கற்களும் வெளியேறிட வழி பிறக்கும். பெரும்பாலும் புதிதாக தோன்றிய கற்களே எளிதில் இந்த வகை சிகிச்சையின் மூலம் வெளிப்படும். நீண்ட காலமாகவே கற்கள் உண்டாகியிருந்தால், அவை சிறியவையாக இருந்த போதும் குழாயின் உட்பகுதியில் படிந்து சேர்ந்துவிடுவதால் வெளியேறுவது கஷ்டம்.

வலியை குறைப்பதற்கான சிகிச்சைகள்:

சிறுநீரக கற்கள் உடையோர் அதிக வலியுடன் வருகின்ற போது அவர்களுக்கு வலியை குறைக்க முதலில் சிகிச்சை செய்ய வேண்டும். இவர்களுக்கு பெரும்பாலும் இடுப்பு பகுதியில் முதுகுப் பகுதியில் வலி தோன்றலாம். வலி தாங்க முடியாமல் துடிப்பார்கள். இவர்களை முதலில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையை தொடங்க வேண்டும்.
வீட்டிலிருந்தால் முதலில் வலி மிகுந்தயிடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். வலி குறைப்பதற்காக மருந்துகளை மருத்துவர்கள் இவர்களுக்கு தருவார்கள். சிறுநீரை வெளியேற்றும் குழாயை விரிய செய்யும் மருந்துகள், வலியை குறைக்க உதவும் மருந்துகள் என டைகுளோபினாக், மார்பின், பெத்தடீன் போன்ற மருந்துகளும், அட்ரோபின் மருந்தும் இவர்களுக்கு பெரிதும் உதவும்.

அவசர சிகிச்சை

சிலருக்கு இரண்டு பக்கமும் கற்களால் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரை வெளியேற்ற முடியாத நிலைமை தோன்றினால் அல்லது அடைப்பினால் இரண்டு சிறுநீரகத்திலும் நீர் தங்கி பாதிப்பு ஏற்பட்டால் அல்லது அடைப்பின் காரணமாக சிறுநீரகம் அழற்சியினால் பாதிக்கப்பட்டால் இவர்களுக்கு உடனடியாக அவசர சிகிச்சை செய்து தடை ஏற்படும் கற்களை வெளியேற்ற வேண்டிய நிலைமை ஏற்படும்.

அறுவை சிகிச்சைகள்:

நீண்ட காலமாகவே கற்களை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை தான் உதவியது. இந்த அறுவை சிகிச்சை முறை ஒவ்வொரு நபருக்கும் ஏற்கெனவே கூறியபடி வித்தியாசப்படும். எந்த இடத்தில் கல் இருக்கிறது அது எந்தளவிற்கு உள்ளது என்பதை அடிப்படையாக வைத்து அறுவை சிகிச்சையினை தீர்மானிக்கிறார்கள். ஒருவருக்கு சிறுநீரகத்திலேயே கற்கள் தோன்றியிருந்தால் அதற்கு அறுவை சிகிச்சையின் மூலமாக சிறுநீரகத்தை அடைந்து அங்குள்ள கல்லை அகற்ற வேண்டும்.

சிறுநீர் வெளியேறும் சிறுநீரக பிரிவு பகுதியில் அறுவை சிகிச்சை:

சிறுநீரகத்தின் நீர் தேங்கும் பகுதியில் கல் தங்கியிருந்தால் அதற்கென பிரத்தியேக அறுவை சிகிச்சை உண்டு. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்கள் பெரும்பாலும் இப்பகுதியிலேயே காணப்படும். இதற்காக சிறுநீரகத்தின் பின்பகுதியை அடைத்து அங்குள்ள கொழுப்பு பகுதிகளை விலக்கி, நீர் தங்கும் பகுதியை பிளந்து கல்லை எடுக்க வேண்டும்.
சில சமயங்களில் இது சிறிது மேல் நோக்கி சென்று விடலாம். இதனை சுண்டு விரலை செலுத்தி அகலப்படுத்தியபடி, இதற்கென உள்ள பிடிப்பானால் எடுக்க வேண்டும். பிறகு திறந்த பகுதியை தையலிட்டு மூடி விட வேண்டும்.

சிறுநீரகத்தை கீறி கல்லை அகற்றும் அறுவை சிகிச்சை:

சிலருக்கு நீர் தேங்கும் பகுதி கல் தங்காமல், சிறுநீரகத்துடன் உட்பகுதியில் மற்றும் கேலிஸ் எனப்படும் சிறுநீரக நுண் குழாய்கள் இணைந்து கூடுமிடங்கள் ஆகிய இடங்களில் கல் தோன்றியிருக்கும் மான் கொம்பு போல கற்கள் ஒன்றொடு ஒன்று சேர்ந்து சிறுநீரகத்துடன் கேலிஸ் பகுதியை முழுவதும் அடைத்துக்கொண்டிருக்கும். இவர்களுக்கு சிறுநீரகத்தின் விரிந்த பகுதியில் (பெல்விஸ்) மட்டும் கீறி அறுவை சிகிச்சை செய்து கற்களை வெளியேற்ற முடியாது. எனவே சிறுநீரகத்தின் உட்பகுதி வரை பிளந்தே இக்கற்களை எடுக்க வேண்டியது வரும். இதில் சிறுநீரகத்தையே கீற வேண்டியது இருப்பதால், இது பெரிய அறுவை சிகிச்சையாகும்.

இதனால் ரத்த இழப்பும் அதிகமாக ஏற்படலாம். எனவே இவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையினை செய்ய வேண்டும். சிறுநீரகத்தை கீறி, தெரியும் கற்களை, அல்லது கெல்ஸ்-ல் நிறைந்துள்ள கல்லை இதற்கென உள்ள கற்களை எடுக்கும் கிடுக்கியால் எடுக்க வேண்டும். இவர்களுக்கு சிறுநீரகத்தில் அழற்சி இருக்குமாயின், சிறுநீரக வெளியேறும் பிரிந்த பகுதியில் துளையிட்டு அதன் வழியாக ஒரு குழாயினை செலுத்தி அதை உடலுக்கு வெளியே வைத்து தைத்து விடுவார்கள். இறுதியில் தோலில் கீறிய இடத்தை தையல் போட்டு மூடுவார்கள்.