செவ்வாய், 5 ஏப்ரல், 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்புக்கு இராணுவத்துக்கு பதிலாக பொலிஸ் அனுப்பி வைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவக் குழுவை நீக்கி விட்டு அதற்காக பொலிஸாரை அனுப்பி வைத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. 
 
இது குறித்து அத தெரண வினவிய போது, கடந்த வௌ்ளிக் கிழமையளவில், பாதுகாப்புப் பணியில் இருந்த 50 இராணுவத்தினர் இவ்வாறு இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப் பட்டுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர்களுக்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார். 
 
இது இவ்வாறிருக்க, பாதுகாப்பு சபையினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேர்த்தன குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்கும் பொலிஸாரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
எதுஎவ்வாறு இருப்பினும் பாதுகாப்பு படையை குறைக்க எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸாரை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் ருவன் விஜேவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.