செவ்வாய், 5 ஏப்ரல், 2016

புலம்பெயர்ந்த புலிகள் மீதான தடைநீக்கத்தின் விளைவே தற்கொலை அங்கி மீட்பு

ஆட்சி மாற்றத்தின் பின்னர் 12 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது. அதன் விளைவாகவே  இன்று நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
 
இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்களை விசாரணை செய்யும் புலணாய்வு பிரிவினர் சிவாஜி லிங்கம், வடமாகாண முதலடைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போன்ற பிரிவினை வாதிகளை ஏன் விசாரணை செய்யவில்லை என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர   கேள்வி எழுப்பினார்.
 
மத்திய அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களிலும் மாகாண சபையின் சட்டத்திட்டங்களிலும் மாற்றம் செய்து வடக்கிற்கு காணி, பொலிஸ் மற்றும் நிதி   அதிகாரங்களை  வழங்க அமைச்சர் சம்பிக்க ரணவக முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பல குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்து மக்களை திசை திருப்பி ரணில் மைத்திரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த நாள் தொடக்கம் பிரிவினை வாதிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் வெகுவாக இடம்பெறுகின்றன.
 
இதில் வடக்கு முதலமைச்சர் , எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோரின் பிரிவினைவாத சிந்தனைகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கோரிக்கைக்கு இணங்கியும் பல பிரிவினைவாத செயற்பாடுகளை உள்நாட்டில் முன்னெடுக்கின்றது.
 
இந்த நிலைப்பாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினார்.  அதற்காக குற்றப்புலணாய்வு பரிவு அவரை விசாரணை செய்தது.  ஆனால்  இது முன்னாள் விடுதலை புலிஉறுப்பினர்களின் செயற்பாடு அல்லவென திட்டவட்டமாக கூறும் சிவாஜிலிங்கம் மற்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை இதுவரையில் விசாரணை செய்யவில்லை. இது பிரிவினை வாதிகளை வலுப்படுத்தும் செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.