புதன், 18 ஆகஸ்ட், 2010

கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை நிறுத்துமாறு இடம்பெயர்ந்தோர் கோரிக்கை

செட்டிக்குளம் வலயம் நான்கு நலன்புரி நிலையத்தில் வசிக்கும்சுமார் 1600 குடும்பங்களை சேர்ந்த 5000 பேர் வரை நாளை புதன்கிழமை செட்டிக்குளம் கதிர்காமம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றவுள்ளதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அம்மக்கள் கோரியுள்ளனர்.

இவ்விடயத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கும் அவர்கள் கொண்டுவந்துள்ளனர்.

தாங்கள் அனைவரையும் கதிர்காமம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி ஒரு மாதத்தினுள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதாக இராணுவம் தெரிவித்ததாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் தங்களுக்கு இவ்விடயத்தில் எவ்வித உடன்பாடும் இல்லை என்றும் தங்களை இந்த முகாமில் வைத்து பின் மீள் குடியேற்றுமாறு அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதனால் தங்களின் வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போவதுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிப்படையும் என அம்மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயத்தை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.