வடக்கு, கிழக்கில் காணி உரிமையாளர்கள் தமது விவரங்களைப் பதிவுசெய்யக்கோரி காணி ஆணையாளர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீதிபதி டபிள்யூ.பி. ரஞ்சித் சில்வா முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது வழக்கின் வாதிகள், பிரதிவாதிகள் ஆகிய இரு தரப்பினரும் சுற்றறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கருத்திற்கொள்ள அவகாசம் கோரிய நிலையில் இவ்வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா ஊடாக இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.
காணி ஆணையாளர் திணைக்களத்தின் சுற்றறிக்கையானது குரோதமனப்பாங்குடன் சட்டவிரோதமான வகையில், வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையில் உள்ளதாக மனுதாரரான சுமந்தின் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமக்குச் சொந்தமான காணிகள் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளன எனவும் இந்தச் சுற்றறிக்கையினால் தான் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சுற்றறிக்கையை இரத்துச் செய்யுமாறும் உத்தரவிடுமாறு கோரியும் தமது மனு தொடர்பான வழக்கு விசாரணை முடியும்வரை சுற்றறிக்கையின்படி செயற்படுவதை இடைநிறுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக்கோரியும் மனுதாரரான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
