வெள்ளி, 4 நவம்பர், 2011

லிபிய முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் மகன் சஹாரா பாலைவனத்தில்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும், லிபிய முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் மகன் சஹாரா பாலைவனத்தில் ஒளிந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கடாஃபியின் மகன்களில் ஒருவர் சீஃப் அல் இஸ்லாம் கடாஃபி. லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்தபோது சில முக்கிய ராணுவத் தலைவர்களுடன் லிபிய எல்லையிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. டுயெரக் பழங்குடி இன மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். இந்த இன மக்கள் வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் வாழ்கின்றனர்.

தப்பியோடியுள்ள கடாஃபியின் மகனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடி வருகிறது. உள்நாட்டுப் போரின்போது, சில ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொது மக்களை கொன்று குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் ஆப்பிரிக்காவில் சில நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரந்து விரிந்த பாலைவனப் பகுதியில் நீண்ட நாள்கள் உயிர் வாழ முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ஆதம் தியாம் தெரிவித்துள்ளார். எனினும் மாலி நாட்டுப் பாலைவனப் பகுதிகளில் சில இடங்களில் நீரும், விலங்குகளும் உள்ளன. ஆனால் அப்பகுதி அல் காய்தா பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லிபிய நாட்டில் இஸ்லாமிய இயக்கங்களை அடக்கி ஒடுக்கிய கடாஃபி குடும்பத்தவரை அவர்களுக்குப் பிடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.