செவ்வாய், 13 டிசம்பர், 2011

பிரித்தானியாவில் இலங்கை பிரஜையை கொலை செய்த நால்வருக்கு ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் CCTV எனப்படும் பாதுகாப்பு கமராவில் பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த போது இலங்கை பிரஜையான அப்பிள்ளையின் தந்தையை கொலை செய்த நான்கு பிரித்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவில் தனது சொந்த வர்த்தக நிலையில் வைத்து 48 வயதுடைய சுப்பையா தர்மசீலன் என்ற நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ம் திகதி நால்வர் கொண்ட குழுவால் அடித்து, உதைத்து, வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இரட்டையர்களான லேன் மற்றும் ஜோன் மீனன், எந்தனி பாய்லிஸ் மற்றும் அவருடைய இளைய சகோதரர் ஆகிய நால்வருக்கு 20 தொடக்கம் 27 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ்டன் பகுதியில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் இந்த கொலை புரியப்பட்டுள்ளதாக பேர்மிங்காம் கிரவுன் நீதிமன்ற நீதிபதி வைன் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

கொலையை தர்மசீலனின் பிள்ளை பாதுகாப்பு கமராவில் பார்த்ததால் அவர் பாரிய மனக்கஸ்டம் அடைந்திருப்பார் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தர்மசீலனை சிறிய கத்தியால் நெஞ்சில் குத்திய லேன் மீனனுக்கு 27 வருட சிறை தண்டனையும் ஜோன் மீனனுக்கு 24 வருட சிறை தண்டனையும் ரியன் மற்றும் பயிலிஸ்ஸுக்கு முறையே 20 மற்றும் 21 வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.