இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபராக புதிதாக நியமனம் பெற்ற ஆர்.உதயகுமாரின் நியமனம் ஜனாதிபதியின் தலையீட்டுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரபா கணேசன் எம்.பி மேலும் கூறியதாவது,
இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றுள்ள ஆர்.உதயகுமாரிடம் அப்பதவிக்கான பொறுப்புக்களைக் கையளிக்கக்கூடாது என்று இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட குழுவொன்று நேற்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
அத்துடன், ஷர்மா என்பவரை மேற்படி கல்லூரியின் அதிபராக நியமிக்குமாறும் அக்குழுவினர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். இந்நிலையில், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, உதயகுமாரின் நியமனத்தை ரத்து செய்து, ஷர்மாவுக்கு நியமனம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இதன்போது, ஜனாதிபதியிடம் கருத்து தெரிவித்துள்ள மேல் மாகாண முதலமைச்சர், உதயகுமார் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் சிபாரிசின் பேரிலேயே நியமனம் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார். அத்துடன், உதயகுமார் தொடர்பான உண்மைத் தகவல்களையும் ஜனாதிபதியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் உதயகுமார் மற்றும் ஷர்மா ஆகிய இருவருக்கும் இந்துக் கல்லூரி அதிபருக்கான நியமனத்தை வழங்காது, அக்கல்லூரியின் அதிபர் பதவிக்கான விண்ணப்பங்களை மீண்டும் கோரி, அதன்மூலம் புதியவரொருவரை அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியான தொடர்பு கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகல் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படும்' என்றும் பிரபா கணேசன் எம்.பி. மேலும் கூறினார்.
