வியாழன், 10 மார்ச், 2016

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நல்லாட்சி அரசாங்கம் தள்ளி விட்டுள்ளது - பந்துல

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்  நல்லாட்சி அரசாங்கம்  தள்ளி விட்டுள்ளதாக தெரிவித்துள்ள கூட்டு எதிர் கட்சி, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான  கையெழுத்து வேட்டையை பாராளுமன்றத்தில் ஆரம்பித்துள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
 
அரசாங்கத்தின்  முறையற்ற பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விவாதிப்பதற்கு ஒரு நாள் போதுமானதாக அமையாது.
 
எனவே ஒரு வாரகால விவாதத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வரவேண்டும். எமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியா விடின் ஆட்சியை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டத்தை  பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கையிலும் அதன் பின்னரான விவாதத்திலும் சபாநாயகர் கூறிய வார்த்தைகளை தவிர ஏனைய அனைத்து மாற்றப்பட்டுள்ளது.
 
எனவே நிதியமைச்சர் நம்பிக்கை இழந்து விட்டுள்ளார். வரி ஊடாக அரச வருமானத்தை அதிகரித்து மக்கள் மீது பாரத்தை சுமத்தும் கொள்கையை தற்போதைய ஆட்சி முன்னெடுக்கின்றது. 1987 ஆம் ஆண்டிலிருந்து  இவ்வாறான நிதி நிர்வாகத்தில் இவ்வாறான வீழ்ச்சி  ஏற்பட வில்லை. ஏந்தவொரு அரசாங்கத்திற்கும் கிடைக்காத பாரிய நன்மை மசகு எண்ணை கொள்வணவின் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
 
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு  தெரிவித்தார்.