யாழ்ப்பாணம் மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உதவித் தொகையினைப் பெறுகின்ற அங்கவீனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6, 491 அங்கவீனர்கள் உதவித் தொகைளைப் பெறும் தகுதி கொண்ட நிலையில் இருக்கும்போது, இவர்களில் 2010 பேருக்கு மாத்திரமே உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் கடந்த கால யுத்தம் காரணமாக அங்கவீனமானவர்கள் மிக அதிகளவில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது இந்த உதவித் தொகைளை விஸ்தரித்து பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து, நாடு தழுவிய ரீதியில் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தியிருந்தேன்.
அந்த வகையில், யாழ் மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அங்கவீன நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்களின் நலன்கருதி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
