வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதை எதிர்க்கவில்லையெனத் தெரிவித்த மஹிந்த அணி ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார அதிகாரத்தை பரவலாக்குவதால் மட்டும் நாடு முன்னேற்றமடையாது என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பே உள்ளது. அதற்கமையவே தற்போது அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த அதிகாரங்களை மேலும் பரவலாக்க வேண்டும். பலப்படுத்த வேண்டும். இதில் தவறில்லை. அதேவேளை வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாகாண சபைகளுக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.
இதனை நான் எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய அரசு தனது ஆதிக்கத்தின் கீழ் இந்த அதிகாரங்களை வைத்துக் கொண்டு தான் பரவலாக்க வேண்டும்.
அதாவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்திய அரசு மீளப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலம் மட்டும் நாடு முன்னேறும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மாறாக வசதிபடைத்தோர் வசதி இல்லாதோர் இடைவெளி நிரப்பப்பட வேண் டும்.
உற்பத்திகள் அதிகரிக்கப்படவேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே நாடு முன்னேற்றமடையும் என்றார்.

