நாட்டில் வரட்சி நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட அனைத்துப் பகுதிகளும் மிகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பகுதி மக்களின் நிலையறிந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இந்த வருடத்தில் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரட்சி நிலையானது, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் நீருக்கான தட்டுப்பாடு நிலவுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரட்சி நிலை தொடருமானால் எமது மக்கள் இன்னும் அதிகமான பாதிப்பினைச் சந்திக்க நேரிடும். தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் வரட்சி நிலை தொடர்வதால், மக்கள் நீர்த் தட்டுப்பாட்டிற்கு மட்டுமன்றி, வாழ்வாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விவசாயத்துறை சார்ந்த மக்கள், பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் தொழில் வாய்ப்புகள் சவாலானதொரு நிலையில் வாழ்ந்துவருகின்றனர். எனவே, இவ்வனைத்து மக்களின் நிலை கருதி அரசு இவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

