வெள்ளி, 14 டிசம்பர், 2018

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்ற விசாரணை தற்போது தொடர்கிறது

இடைக்கால தடைக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத் தப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை ஈவா வனசுந்தர, புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வழக்கு தொடர்பில் நேற்றைய தினம் (13) கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. அதற்கமைய அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், நீதிபதி ஈவா வனசுந்தர இன்றிய, பூரண நீதிபதிகள் குழாமொன்றை நியமிக்குமாறு கோரினர்.
 
இதேவேளை நேற்றைய தினம் (13) மஹிந்த ராஜபக்‌ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால், குறித்த மனு விசாரணைக்கு பூரண நீதிபதிகள் குழாம் அடங்கிய நீதிபதிகள் குழாம் அவசியமில்லை என நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.

கடந்த 39 வருடங்களாக அரசாங்கத்திற்காக சேவையாற்றிய தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் இறுதி தினம் இன்றாகும் என, நீதவான் ஈவா வனசுந்தர இதன்போது தெரிவித்தார்.

இதனையடுத்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு, நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்று (14) எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த மனு விசாரணையின்போது, நண்பகல் 12.55 மணியளவில் 15 நிமிட இடைவேளை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குறித்த வழக்கு தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்தே இடைவேளை வழங்கப்படும் முன்னர், மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்னிலையாகி தனது வாதங்களை முன்வைத்தார்.

இதன்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் ஈவா வனசுந்தர, நீதிபதியாக கடமையாற்றும் இறுதித் தினம் இன்று என, நீதவான் புவனேக அலுவிஹாரே அறிவித்திருந்ததோடு, அங்கிருந்த நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினமும் உச்சநீதிமன்றத்தை சூழவுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.