ஞாயிறு, 24 மே, 2020

5000 ரூபா நிவாரண நிதியை தடுத்து நிறுத்திய அரசியல் வாதிகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள்! பிரதமர்

கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்களை கொடுத்த அரசியல்வாதிகள் குறித்து பகிரங்கமான பின், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான பதிலை வழங்குவார்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,கொரோனா வைரஸ் காரணமாக தமது நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்களுககு அரசஙகம் இந்த 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை வழங்கும் போது, அந்த தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி பகிரங்கமாக முதலை கண்ணீர் வடித்த எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்று அதற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனால், ஜூன் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி நிறுத்தப்பட்டுள்ளது.இதனை அரசியல் இலஞ்சம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் கொரோனா வைரஸ் தொற்று நோயை பயன்படுத்தியும் அரசியல் செய்ய முயற்சி செய்கது வருவது தொடர்பில் வருத்தப்படுகிறேன்.

கஷ்டங்களுக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணமாக இந்த உதவி தொகை வழங்கப்பட்டது. இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் மக்களுக்கு வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுவதை நிறுத்துமாறு தாம் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவில்லை எனவும், அந்த நடவடிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்மயப்படுத்தியுள்ளதை நிறுத்துமாறு கோரியே முறைப்பாடு செய்ததாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதை நிறுத்துமாறு உத்தரவிடவில்லை எனவும், அதனை அரசியல்மயப்படுத்தாது, அரச அதிகாரிகள் ஊடாக அதனை மக்களுக்கு வழங்குமாறு தாம் கேட்டுக் கொண்டதாகவும் தேர்தல் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.