செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி படகினூடாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் சிலாபம் மாரவில பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார். இந்த ஆள்கடத்தலை ஏற்பாடு செய்திருந்த பிரதான ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஐவரே கடற்படையின் புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா, கனேமுல்ல, மாஹோ மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் எனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். கடல் மார்க்கமாக மீன்பிடி படகினூடாக அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் ஏற்பாட்டாளர், ஏனைய நால் வரிடமிருந்தும் தலா 6 இலட்சம் ரூபா வீதம் இதற்காக அறவிடப்பட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாரவில பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர்.

இதன் பிரதான ஏற்பாட்டாளரை விசாரணைக்குட்படுத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் அவரிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட ஏனைய முக்கிய புள்ளிகளையும் தேடி சிலாபம் முழுவதும் பாரிய தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.