கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவிகள் 500 பேர் வெளி மாவட்டங்களுக்கு இலவச சுற்றுலா பயணத்திற்காக அழைத்துச் செல்ல அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகளும், 20 ஆசிரியர்களும் நாளை தமது முதலாவது சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
சுமார் எட்டு நாட்கள் மேற்கொள்ளவுள்ள இந்த சுற்றுப் பயணத்திற்காக வட மாகாண சபை 16 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தரம் 8 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்கும் 500 மாணவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அநுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
