கனடா ஐக்கிய நாடுகள் சபை அல்ல. மனிதத்துவத்திற்கு எதிரான போர்க்குற்றச் சந்தேகநபர்களை விசாரணை செய்வது கனடாவை பொறுத்த விடயமல்ல, என்று அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் விக்தௌஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் இழைத்த சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களை நாடு கடத்துவதற்கு கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஏனைய நாடுகளில் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்த ஆட்களை விசாரணை செய்து சிறை வைப்பது கனடாவுக்கு யதார்த்த பூர்வமான விடயமல்ல என்று அவர் கூறியுள்ளார்.
கனடா ஐ.நா. அல்ல. இந்த ஒவ்வொருவரையும் நீதியின் முன் நிறுத்தி உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு எங்களுடையதல்ல. அது அவர்களுடைய நாடுகளின் பொறுப்பாகும் என்று சி.பி.சி.க்கு விக் தௌஸ் கூறியுள்ளார்.
கனடாவின் எல்லைச்சேவைகள் முகவரமைப்பானது கனடியச் சட்டத்துக்கு அமைவாகவே செயற்படுகிறது. இவர்கள் இங்கிருப்பதற்கு உரிமையற்றவர்கள். அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
