வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை (வயது 76) என்பவரும் போட்டியிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கரவெட்டி நாவலர் மடம் சந்தியிலுள்ள பூட்சிற்றிக்கு முன்பாக நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் அப்பகுதிக்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் கரவெட்டி சமுர்த்தி முகாமையாளருமான பொன்னம்பலம் குகதாசன் என்பவர் கணபதிப்பிள்ளையை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவர் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளார்.
இதன் போது தாக்குதலுக்கு இலக்கான கணபதிப்பிள்ளை உடனடியாக அருகிலிருந்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சம்பவம் குறித்த முறைப்பாட்டைச் செய்திருந்தார்.
உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்ததன் பின்னர் வலி வடக்கு பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஈ.பி.டி.பி. ஆதரரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மற்றொரு கட்டமாக வடமராட்சியிலும் அதேபோன்றதொரு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான கணபதிப்பிள்ளை உடுப்பிட்டி பலநோக்குக் கூட்டறவுச் சங்கத் தலைவராக இருந்துள்ளதுடன் யாழ் மாவட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவராகப் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
