செவ்வாய், 13 டிசம்பர், 2011

தலைவர் பதவிக்கான பிரசாரங்களை ஆரம்பிக்கிறார் கரு: மஹாநாயக்க தேரர்களுடன் சந்திப்பு

ஐ.தே.கவின் தலைமைத்துவ போட்டி தீவிரமடைந்துவரும் நிலையில் கட்சியின் தொழிற்சங்கம், மஹாநாயக்க தேரர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான பிரசாரங்களை கட்சியின் மறுசீரமைப்புக் குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தலைமையிலான தூதுக்குழுவினர் ஆசீர்வாதம் கோரி, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்க தேரர்களை இன்று செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளதாக மறுசீரமைப்புக்குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

இத்தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, முன்னாள் உதவித் தலைவர் ருக்மன் சேனநாயக்க, இம்தியாஸ் பார்கீர் மார்கார் ஆகியோரும் அடங்குவர் என ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

ஏனைய சமயத்தலைவர்களையும் இத்தூதுக் குழுவினர் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஐ.தே.கவின் தொழிற்சங்கமான தேசிய கல்வி ஊழியர் சங்கம் தமது அணிக்கு ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.