200 குடும்பங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் மீளக்குடியமர்த்தப் படவுள்ளதுடன் இவர்களுக்கென 2இலட்சத்து85ஆயிரம் பெறுமதியான 200 வீடுகள் அமைக்கப்பட உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.
அதன்படி வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள 200 குடும்பங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் மீளக்குடியமர்த்தப் படவுள்ளனர்.
இங்கு 3 கிராம சேவகர் பிரிவுகளில் இவர்கள் குடியமர்த்தப்படுவார்கள்.
இம்மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் ஒத்துழைப்புடன் காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் வாழக்கூடிய இடமாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் பின்புறமாக தனியான மலசலகூட வசதியும் 120சதுர அடி கொண்ட அறைகளுமாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் 7 ஆம் திகதி மீள்குடியேறும் 200 குடும்பங்களுக்கும் 20 கிலோ சிகப்பு நாட்டரிசி உட்பட 3500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளும் மண்வெட்டி ஹரிக்கன் விளக்குகள் செய்கை பண்ணுவதற்கான விதை வகைகள் உர வகைகள் படுக்கைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார்.
