தமிழ் பேசும் மக்களும் அவர்களின் தலைவர்களும் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர் எனவும் இனிமேலும் ஏமாற்ற முடியாது. இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் ஆட்சியதிகாரம் பற்றிய இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு திருகோணமலை நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வா, வா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு விட்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு நடத்தலாம். ஆனால் குழுவில் எடுக்கப்படும் எந்த முடிவும் பிரயோசனம் அற்றதாகிவிடும் என்பதால் தான் வா,வா என்று கூட்டமைப்பை அழைக்கின்றார்கள்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வரமாட்டோம் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் அரசாங்கம் விசுவாசமாகப் பேச வேண்டும். பேச்சுக்கு வா வா என்று அழைக்கின்றீர்கள். ஆனால் பேச்சுக்கு வந்தால் என்ன நடக்கிறது என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.ஸ்ரீதரன், வினோ நோகரதலிங்கம், சீ.யோகேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
