திங்கள், 6 பிப்ரவரி, 2012

வடக்கு, கிழக்கு இராணுவமயமாக்கப்படவில்லை - கோட்டாபய மறுப்பு

வடக்கு, கிழக்கு இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் மறுத்துள்ளார்.

நாட்டின் 22 மாவட்டங்களும் ஒரேசமமாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 வருட யுத்தம் நிறைவுற்று 3 வருட காலத்தில் வடக்கில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

சில மக்கள் எங்களுடைய நடவடிக்கைகளை விரும்பாது எமக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு எதிராக தமது அரசு செயற்படவில்லை எனவும் அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகத்தில் இணைத்துள்ளதாகவும் இன்னும் 700 முன்னாள் போராளிகளே விடுவிக்க எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட தலைவர் வி.பாலகுமாரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், குறித்த விடயம் தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் அவர் தடுப்பில் உள்ளாரா என தனக்குத் தெரியாது எனவும் இறுதிப் போரில் இறந்து விட்டதாகவே தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் குறிப்பிட்டளவு இராணுவத்தினரே உள்ளதாகவும் யுத்தத்தின் பின்னர் அவர்களை உடனடியாகத் திருப்பி அழைக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.