தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருள்கள் கடத்திய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு சென்னை விமான நிலையம் அருகே விடுதலைப் புலிகளுக்கு படகு உள்ளிட்ட தளவாடச்சாமான்கள் கடத்தியதாக 2 பேரை கைது செய்த கியூ பிரிவு பொலிஸார், நடத்திய விசாரணையில், தங்களுக்கு வன்னியரசு என்பவர் தளவாடச்சாமான்கள் அளித்ததாக கூறினர்.
இதைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வன்னியரசு பிணையில் வெளியே வந்தார். இந்த வழக்கில் 2009ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வன்னியரசு விசாரணைக்கு அழைக் கப்பட்டார். ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து 2010ஆம் ஆண்டு பிணையில் வெளிவர முடியாதபடி பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். பொலிஸார் அவரை கைது செய்யவில்லை.
இந்த நிலையில், கடந்த மாதம் வன்னியரசு மீது புதிதாக பிடிவாரண்டு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று (04) அமைந்தகரையில் வைத்து, கியூ பிரிவு பொலிஸார் வன்னியரசுவை கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை 23வது நீதவான் நீதிமன்றத்தில் வன்னியரசு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
