வெலிக்கடை புதிய மெகசின் சிறையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் பின் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 46 கைதிகளுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சிறை வைக்கப்பட்டுள்ள குறித்த 46 கைதிகளும் இன்று (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்களுக்கு எதிரான சாதாரண சாட்சி இல்லை என்பதால் அவர்களுக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.
எனினும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச் சொத்து சேதத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஏற்படுத்தியுள்ள சொத்து சேதம் 25000 ரூபாவிற்கும் அதிகம் என்பதால் பொது சொத்து சேத சட்டத்தின்படி அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாதென குற்றத்தடுப்புப் பிரிவினர் கேட்டுக் கொண்டனர்.
இக் கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரஹர்சா ரணசிங்க சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவித்தார்.
இதன்படி சந்தேநகபர்களை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
