வியாழன், 15 மார்ச், 2012

இலங்கை தொடர்பில் ஐநா சபைக்குத் தகவல் வழங்க எதிர்கட்சியில் இரு ஒற்றர்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு பிரதிநிதிகள் வேறு வடிவத்தில் இலங்கைக்குள் நுழைந்துள்ளார்கள் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இராஜதந்திரமற்ற நிலையில் இலங்கை வந்துள்ள இவர்களுக்கு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இலங்கை குறித்த தகவல்களை வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நாட்டுக்கு மேலும் அபகீர்த்தியை ஏற்படுத்த அவர்கள் முனைவதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை குறித்து தகவல் வழங்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அவ்வாறு தண்டனை வழங்கினால் அதுவும் மனித உரிமை மீறல் என சர்வதேசத்திற்கு அவர்கள் பிரச்சாரம் செய்துவிடுவார்கள் என குறிப்பிட்டார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு எதிர்க்கவில்லை எனவும் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மனித உரிமை கவுன்ஸிலில் பிரேரணை முன்வைக்கப்பட்டதையே எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிந்துரைகளை நிறைவேற்றுவது எப்படி? அதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு? கண்காணிப்பது யார்? என்பது குறித்து தீர்மானிப்பது இலங்கையே தவிற சர்வதேச சமூகம் இல்லை என பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.