வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மர்மப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது

இராமநாதபுரம் மண்டபம் அருகே வேதாளை குறவன்தோப்பு கடற்கரைக்கு, மர்ம படகில் வந்த இலங்கையரை, பட்டுகோட்டை பொலிசார் பிடித்து, இராமநாதபுரம் கியூ பிரிவு பொலிசில் ஒப்படைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே, வேதாளை ஊராட்சி குறவன்தோப்பு கடற்கரை பகுதியில், ஜூலை 23ம் திகதி, இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகு, கேட்பாரற்று நின்றது.

படகில் மூன்று இலங்கையர்கள் வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கியூ பிரிவு பொலிசார், தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பட்டுகோட்டையில் உள்ளூர் பொலிசார், இரவு ரோந்து சென்றபோது, சிங்கள மொழியில் பேசியவரைப் பிடித்து விசாரித்தனர்.

அவர், மர்ம படகில் வந்தவர் என்றும், இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த சுரேஷ், (வயது 28) எனவும் தெரியவந்தது.

இவரை நேற்று, இராமநாதபுரம் கியூ பிரிவு பொலிசில் ஒப்படைத்தனர். இராமநாதபுரத்தில் நடத்திய விசாரணையில், ஏழு அகதிகளை ஏற்றி வந்ததாக சுரேஷ் தெரிவித்தார்.

பொலிசார், அகதிகள் முகாம்களில் புதிததாக அகதிகள் யாரும் பதிவு செய்துள்ளனரா என விசாரித்ததில், யாரும் பதியவில்லை என தெரிந்தது.

மீண்டும் சுரேஷிடம் விசாரித்தபோது, இலங்கையை சேர்ந்த மூன்று பேர் வந்ததாக தெரிவித்தார். முன்னுக்குபின் முரணாக பேசுவதால், பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.