யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பிரதேசத்தில் தற்போது நெருப்புக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த பத்து நாட்களினுள் 11 நெருப்புக் காய்ச்சல் நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு வேலணை புங்குடுதீவு பகுதிகளில் மேலும் நெருப்புக் காய்ச்சல் பரவாது தவிர்த்துக் கொள்வதற்கு பொது மக்களை பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
போதுமானளவிலும் மற்றும் எப்போதும் பாதுகாப்பான குடிநீரையே (கொதித்தாறிய) பருகுங்கள், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரது மலமும் பாதுகாப்பாக மலகூடத்தினுள் அகற்றப்பட வேண்டும்.
உணவுப் பொருட்களை சமைத்தவுடன் உண்ணுங்கள் மற்றும் உணவுப் பொருட்களை மூடி வைத்திடுங்கள். உணவினைத் தொடுவதற்கு முன், மலசல கூடத்திற்கு சென்று வந்த பின் மற்றும் கைகள் அழுக்கடையக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கைகளை நன்றாக சவர்க்காரமிட்டுக் கழுவுங்கள். சமைக்காது உண்ணும் உணவுப் பொருட்களை எப்போதும் நன்றாக கழுவிய பின் (உப்பு நீரில்) உண்ணுங்கள்.