புதன், 1 ஆகஸ்ட், 2012

நாகர்கோவில் மகா வித்தியாலயத்திற்கு ஈபிடிபியின் முயற்சியால் புதிய கட்டிடம்…!(படங்கள் இணைப்பு)

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யுத்த சூனியத்திற்குள் அகப்பட்டு சின்னா பின்னமாகிப் போன நாகர்கோவில் மகா வித்தியாலயத்திற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புதிய கட்டிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வித்தியாலய அதிபர் நா.கண்ணதாஸசன் தலைமையில் இன்று (2012.08.01) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.

பருத்தித்துறை பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி அமைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், வடமராட்சி கல்வி வலயப்பணிப்பாளர் சி.நந்தகுமார், மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி க.பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினர்.   

நாகர்கோவில் மகா வித்தியாலய அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடந்த 2012.05.18 அன்று இடம்பெற்றபோது சேவாலங்கா நிறுவனத்தின் ஊடாக 80 அடி நீளமுள்ள பாடசாலைக் கட்டிடமும் மேலும் 120 அடி நீளமுள்ள ஒரு கட்டிடம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்ää நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நிக்கோட் நிறுவனத்தினூடாக 38 இலட்சம் ரூபாவில் 100 அடி நீளமுள்ள வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கலே நாட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் ஒரு மாத காலத்திற்குள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நாகர்கோவில் கிராம பெரியோர்களும் கலந்து கொண்டனர்.    

இதேவேளை மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நாகர்கோவில் கரையோரப் பிரதேசத்தில் தபால் நிலையத்தை அமைத்துத் தருமாறு அப்பகுதி கிராம மட்ட அமைப்புக்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளன. ஆயினும் இதுவரை புலோலி உபயகதிர்காமம் பகுதியில் செயற்பட்ட நாகர்கோவில் தபால் நிலையம் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்படாத நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தை அண்டிய தெற்குப் பகுதியில் இயங்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.