செவ்வாய், 4 செப்டம்பர், 2012

46 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் தவறவிட்ட ஆவணப் பையை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைப்பு

1966 ஆம் ஆண்டு ஏர் இந்திய விமானம் ஒன்று மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்டு சென்றது. அணு விஞ்ஞானி ஹோமி ஜே.பாபா உட்பட  117 பேர் அதில் பயணித்தனர். செல்லும் வழியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மாண்ட பிளாங்க் என்னுமிடத்தில் அந்த விமானம் விபத்துக்கு உள்ளானது. பனிமலையில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துபோயினர்.
 
இந்நிலையில் அந்த பகுதியில் புதைந்து  கிடந்த அரசியல் ஆவணப்பையை மீட்புக்குழுவினர் சென்றமாதம் கண்டெடுத்தனர். 'அரசியல் கடிதம் மற்றும் வெளியுறவு அமைச்சகம்' என்று பெயரிடப்பட்ட இந்தியாவிற்கு சொந்தமான அந்த பையை நேற்று முறைப்படி பாரிசில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பிரான்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
 
அந்த ஆவணப்பையில் என்ன விவரங்கள் இருந்தன என்பது குறித்து செய்தி வெளியிடவில்லை.  விபத்தில் இறந்த அணு விஞ்ஞானி ஹோமி ஜே.பாபா இந்திய அணு விஞ்ஞான திட்டத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.