தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆயுதம் கிடைக்கப்பெற்ற வழிகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய மற்றும் இலகு ரக ஆயுத பாவனை தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களின் மூலம், சர்வதேசத்தில் ஆயுதங்கள் எவ்வாறு மலிந்து கிடக்கின்றன என்பது தெளிவாக புலனாவதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.