எவ்வாறாயினும் உறுதியான முடிவுடனேயே நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என' ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான காபீஸ் நஷீர் அகமர் சயினுலாப்தீன் தெரிவித்தார்.
'கிழக்கு மாகாணம் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைக் கொண்ட முஸ்லிம் மாகாணமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையின் ஏனைய 7 மாகாணங்களும் சிங்களவர்களினதும், வடமாகாணம் தமிழர்களுக்கானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணம் முஸ்லிம் முதலமைச்சரைக் கொண்ட மாகாணமாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்' எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பது என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகியே அதனைச் செய்தாக வேண்டும். எப்படியிருந்தாலும் உறுதியான முடிவுடனேயே நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
திங்கட்கிழமை இரவு நடைபெறும் உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் முடிவு காணப்படும். எவ்வாறானாலும் புதன்கிழமைக்கு முன்னர் முடிவு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
மட்டக்களப்பில் கல்குடா தொகுதி அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் காரணமாக கல்குடா தொகுதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய ஒரு உறுப்பினர் இல்லாது போயுள்ளது. அதனை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
பிரதேசவாதம் கடந்த ஒரு அரசியலை செய்யவுள்ளேன். இத்தேர்தலில் எமக்கு ஆதரவு தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சேவை தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி மேற்கொள்ளப்படும்' எனவும் தெரிவித்தார்.
