சனி, 13 அக்டோபர், 2012

'கடவுளை நம்பாத கமலோடு, கடவுளை நம்பும் நீங்கள் எப்படி நட்பாக இருக்க முடியும்?'

இப்படி ஒரு கேள்வியை வாசகர்கள் இளையராஜாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு இளையராஜா அளித்துள்ள பதில் படு யதார்த்தம்..."நண்பர்களாக இருக்க முடியாதல்லவா... ஆனால் நண்பர்களாக இருக்கிறோம். அதுதானே விஷயம்.

உண்மையில் அவர் ஒரு ஆழ்வார்தான். கடவுளை நம்புவதோ நம்பாமல் இருப்பதோ.. இரண்டிலும் பொதுவாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது நம்பிக்கை. கமல் கடவுள் இல்லை என்று நம்புகிறார். நான் உண்டு என்று நம்புகிறேன். இந்த இரண்டிலும் இருப்பது நம்பிக்கை ஒன்றே.

அதுதான் கடவுள் என்பது அவருக்குத் தெரியாது, எனக்குத் தெரியும். பெயர் வேறு வேறாக இருந்தால், கடவுளும் வேறு வேறாக இருப்பாரா?
அங்கே இப்படி இங்கே அப்படி என்பதெல்லாம் அவர் விஷயத்தில் கிடையாது. எல்லா மதங்களும் பெயரளவில் வேறுவேறாக இருந்தாலும், ஒரு பொருள்தான்.

கமல், கடவுள் இல்லை என்று சொல்கிறாரே என்பதற்காக கடவுள் வருத்தப்படவும் மாட்டார். கடவுளா அவர் கிடக்கிறார் என்று கமல் சொல்வதை அவர் கண்டு கொள்ளவும் மாட்டார்.அடடே இதைப் பாருங்கள்... அவர் கிடக்கிறார் என்றாலும் இருக்கிறார் என்றுதானே பொருள் வருகிறது.

வள்ளுவனையும் கம்பனையும் பாரதியையும் விட கமல், தான் அறிவில் சிறந்தவன் என அவரே சொல்வாரா? அப்படியே சொன்னாலும் அது உண்மையாகுமா?நம் எல்லோரையும் விட கடவுளை நம்புகிறவர் அவர்தான். இல்லாவிட்டால் தன் படங்களுக்கு அன்பே சிவம், தசாவதாரம், விஸ்வரூபம் என்று பெயர் வைப்பாரா?"-இப்படி பதிலளித்துள்ளார் இசைஞானி. இதற்கு கலைஞானி என்ன சொல்லப் போகிறாரோ!