புதன், 17 பிப்ரவரி, 2016

அரசியலமைப்பு திருத்தத்தில் புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களும் அவசியம்!செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற் போது பொது மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டு வருகின்றன.
 
 நாம் இந்த முயற்சியை வரவேற்றிருந்த நிலையில், இதன் போது புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களும் அறியப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் முன்வைத்தபோது, அந்த யோசனையை பிரதமர் உடனடியாக ஏற்றுக் கொண்டதுடன், அதற்குரிய நடவடிக் கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இதையிட்டு பிரதமர் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அரசியல் திருத்தம் தொடர்பில், புலம்பெயர்ந்தவர்களது கருத்துக்களையும் அறிய அந்தந்த நாடுகளின் இலங்கைக்கான தூதரகங்கள் மூலமாகவும், கானொளி மூலமாகவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டிருந்தேன்.
 
இதனையும் பிரதமர் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், இவ் விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஜனநாயக சூழலில் பல கருத்துக்கள் வெளிவருவது தவிர்க்க முடியாதது.
 
 இதனையிட்டு நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.  இது தொடர்பில் நாம் வீண் தர்க்கங்களில் ஈடுபட்டு காலத்தை இழுத்தடிக்காமல், நடைமுறையில் எமது மக்களுக்கு சாதகமான விடயங்கள் மேற்கொள்ளப்பட இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதே எமது மக்களின் நலன்சார்ந்த செயற்பாடாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.