செவ்வாய், 22 மார்ச், 2016

இலங்கையில் நம்பகரமான விசாரணை முக்கியமானதாகும் : ஐக்கிய நாடுகள் சபை

இலங்கையில் யுத்த காலத்தில்  இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும்  சம்பவங்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணை பொறிமுறை  முனனெடுக்கப்படவேண்டியது அவசியம் என்று   ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 
 
இவ்வாறான நம்பகரமான  விசாரணை பொறிமுறைக்கான வழிகாட்டல்களை   தெளிவான முறையில் ஐக்கிய நாடுகள் சபை  வெளியிட்டுள்ளதாக  ஐ.நா. செயலாளர் நாயகத்தின்  பேச்சாளர்  பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

எக்காரணம் கொண்டும்  விசாரணை பொறிமுறையில்  சர்வதேச நீதிபதிகள் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்று  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ள மையை சுட்டிக்காட்டி  ஐ.நா. செயலாளர் நாயகத்தின்  பேச்சாளரிடம் நேற்று    எழுப்பப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  எவ்வாறு விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை  மதிப்பீடு செய்யலாம்.  
 
ஆனால்  விசாரணை செயற்பாடானது  நம்பகரமாக அமையவேண்டும் என்பதனை நாங்கள் உறுதிபடுத்தவேண்டும்.  
 
அத்துடன்   நம்பகரமான  விசாரணை பொறிமுறைக்கான  வழிகாட்டல்களை   தெளிவான முறையில் ஐக்கிய நாடுகள் சபை  வெளியிட்டுள்ளது.     அவ்வாறு நடைபெறுவதை உறுதிபடுத்தும் நோக்கில்   கலந்துரையாடல்களை  தொடர்ந்து நடத்துவோம் என்றும்  ஐ.நா. செயலாளர் நாயகத்தின்  பேச்சாளர்  பர்ஹான் ஹக்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.