வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகை தராமையால் மக்கள் எதிர்கொண்டுவந்த இடர்பாடு களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதனூடாக தீர்வு காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது –
புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் வவுனியாவில் பெரும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்துவந்த பிரச்சினையான பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகைதராமையால் மக்கள் நாளாந்தம் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகள் தொடர்பிலும் இதற்கான சுமுகமான தீர்வைப்பெற்றுத்தருமாறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவுனியா மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதையடுத்து துறைசார் தரப்பினருடன் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பேச்சுக்களை நடத்தியிருந்ததுடன் தீர்வுகாணும் முகமாக நேற்றுமுன்தினம் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களுடனும் இது தொடர்பில் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இப்பேச்சுக்களின் போது குறித்த விடயம் ஆராயப்பட்டு மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு மீண்டும் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாளை (07) திகதிமுதல் மீண்டும் பேருந்துகள் வவுனியா பழைய பேருந்து நிலையம் சென்று தமது சேவையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


