வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக் கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி நேற்று 22.09.2011 சந்தித்துப் பேசினார்.
அவருடன் மதிமுக மதுரை மாவட்டச் செயலர் பூமிநாதன், சிவகங்கை மாவட்டச் செயலர் செவந்தியப்பன் ஆகியோரும் சென்றனர். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கணேசமூர்த்தி,
மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேரையும் சந்தித்தோம்.
தற்போது நடைபெறும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமோ என்ற சந்தேகம் குறித்து மூவரும் விசாரித்தனர். நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
ஏற்கெனவே, மதிமுக பொதுச் செயலர் வைகோவும், நானும் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்தினோம்.
ராம்ஜேத்மலானி உள்ளிட்ட மூத்த வழக்குரைஞர்கள் மூலம் வைகோ மேற்கொண்ட முயற்சியால் 8 வார காலத்துக்கு தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழ் உணர்வுள்ள அனைவருடனும் இணைந்து மூவரையும் தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்கத் தொடர்ந்து முயற்சிப்போம் என்றார்.
