யாழ்ப்பாணத்தில் களநிலமைகளை அறிந்து கொள்வதற்காக தாம் யாழ். வந்ததாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் சர்வதேச போர்க்குற்ற விவகாரத் தூதுவர் ஸ்டெபன் ரெப் தன்னிடம் கூறியதாக யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக விமானம் மூலம் கிளிநொச்சி வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்த இவரும் இவரது குழுவினரும் நேற்றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ். அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
போருக்கு பின்னரான யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள், மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுத்தல், மிதிவெடியகற்றல் செயற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் இன்றைய யாழ்.நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்கள்.
இச்சந்திப்பின் போது உட்கட்டுமான வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் போன்றவை இன்னமும் மக்களுக்கு தேவையாகவுள்ளதென்று வலியுறுத்திய யாழ். அரச அதிபர், இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மக்கள் மீளக்குடியமர்ந்த ஒரு சில பகுதிகளுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட இவர்கள், யாழ். ஆயரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியையும் இவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
