புதன், 14 மார்ச், 2012

இலங்கை மீதான பிரேரணை குறித்து இந்தியா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லையாம்- எஸ்.எம்.கிருஸ்ணா

ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை குறித்து இந்தியா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது.

இந்திய மாநிலங்களவையில் இன்று (14) விசேட உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியா, இலங்கை குறித்து ஜெனீவாவில் இன்னும் கருத்து வெளியிடவில்லை எனவும் இலங்கை குறித்து ஏதாவது தீர்மானம் எடுத்தால் அது உடனடியாக பாராளுமன்றில் அறிவிக்கப்படும் என கிருஸ்ணா தெரிவித்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு அமெரிக்கா பிரேரணை ஊடாக கோரியுள்ளதாக சுட்டிக்காட்டிய கிருஸ்ணா, ஆணைக்குழு பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டது போன்று தேசிய மனித உரிமை வேலைத்திட்டம், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் இறுதிக் கட்ட யுத்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய இராணுவ விசாரணை குழு என்பவற்றை இலங்கை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியல் தீர்வை காண தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்தியா பல திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் மாநிலங்களவையில் எஸ்.எம்.கிருஸ்ணா பாடிய புராணத்தையே பாடிச் சென்றார்.