இரண்டு கள்ள படகுகள் மூலம் அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சுண்டிக்குளம் கடலில் இருந்து 8 மைல் தூரத்தில் வழிமறிக்கப்பட்ட ´லங்காமாதா´ என்ற படகில் இருந்து 60 தமிழர்கள் ஒரு சிங்களவர் அடங்களாக 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கடலில் இருந்து 21 மைல் தூரத்தில் வழிமறிக்கப்பட்ட ´ஜூடியா´ என்ற கப்பலில் இருந்து 57 தமிழர்கள், 4 சிங்களவர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் அடங்களாக 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 123 பேரில் 118 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கென குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி சிலாபம், கல்பிட்டி, வெற்றிலைக்கேணி, விஸ்வமடு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
