வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆப்கானிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை வாகன விபத்தில் 50 பேர் பலி.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினருக்கு பொருட்கள் கொண்டு செல்லும் முக்கிய சாலையான காபூல்- காந்தகார் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று காலை காஸ்னி மாகாணத்தில் உள்ள ஆப் பந்த் மாவட்டத்தின் ஸ்பின் பந்த் பகுதியில் எண்ணெய் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
 
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியேறினர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் தீ பரவியதால் ஏராளமானோர் உள்ளே சிக்கிகொண்டனர். இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் உடல் கருகி இறந்தனர். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
காஸ்னி மாகாணத்தில், குறிப்பாக விபத்து நடந்த நெடுஞ்சாலை தாலிபான்களின் தாக்குதல் இலக்காக உள்ளது. எனவே இந்த சம்பவம் தாலிபான்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.