வெள்ளி, 14 செப்டம்பர், 2012

நடுக்கடலில் தத்தளித்த 67 இலங்கையர்கள் தமிழக மீனவர்களினால் மீட்பு.

படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் இலங்கைத் தமிழர்கள் 67 பேரை நாகை மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டு நாகைதுறைமுகத்துக்கு நேற்று நள்ளிரவு அழைத்துவந்தனர்.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 67 இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகு இடைவழியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது.  சுமார் 17 நாட்களாக படகில் உணவும் குடிநீருமின்றி பெண்களும் குழந்தைகளும் உட்பட 67 பேர் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கடலில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற நாகை மீனவர்கள்,  இவர்களைக் கண்டவுடன் தாங்கள் கொண்டுசென்ற உணவு மற்றும் குடிநீரை வழங்கியதுடன், இவர்களின் படகை  தங்களது விசைப்படகுடன் கட்டி அவர்களை நாகைதுறைமுகத்துக்கு அழைத்துவந்தனர்.

இவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களெனத் தெரியவந்துள்ளது. இவர்களிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.