மன்னார் கடற்பரப்பில் இரண்டாவது கட்ட எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகளை அடுத்தவருடத்தின் முதற்காலாண்டுப் பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய நிறுவனமான கெய்ன் மன்னார் கடற்பரப்பில் தனது முதற்கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியின் போது 3 எரிவாயுக் கிணறுகளைத் தோண்டியிருந்தது.
இதில் CLPL-Dorado-91H/1z and CLPL-Barracuda-1G/1 ஆகிய கிணறுகளில் எரிவாயு காணப்படுவதனை உறுதி செய்திருந்ததுடன் அதன் வணிகரீதியான பெறுமதியினை இதுவரை உறுதிசெய்யவில்லை.
ஆனால் 3 ஆம் கிணறான CLPL-Dorado North 1-82K/1 வெறுமையாகக் காணப்படுவதாகக் கூறி அதனைக் கடந்த ஆண்டு டிசம்பரில் கைவிட்டுவிட்டது.
மேலும் ஆராய்ச்சிகளின் பின்னர் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இவற்றின் வணிகரீதியான பெறுமதி தொடர்பில் அந்நிறுவனம் அறிவிக்கவுள்ளது.
அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியின் போது 4ஆவது கிணற்றைத் தோண்டவுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் தெரிவிக்கின்றது.
மன்னார் கடற்பரப்பில் 8 எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பகுதிகள் காணப்படுகின்றன.
இதில் இரண்டு சீனாவுக்கும், இரண்டு இந்தியாவுக்கும் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கென வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான கெஸ்புரொம் அண்மையில் எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்பாக கலந்துரையாட இலங்கைக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
