செவ்வாய், 11 செப்டம்பர், 2012

மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்துக்கு நிதி வழங்கல் தொடர்பில் வெளிப்படைத்தன்மையை கோரும் இலங்கை.

மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவது, ஆட்களை நியமிப்பது தொடர்பில் வெளிப்படைத் தன்மையை கூட்டுவதற்கு நாடுகள் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கூறியள்ளது.

இந்த நிறுவனத்தின் நற்பெயர், வினைத்திறன், சுயாதீனம் என்பவற்றை அதிகரிப்பதற்கு நிதி வழங்கல், ஊழியர் நியமனம் என்பவற்றில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பது அவசியமென இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா முறைமையுடன் தொடர்ச்சியாக இணைந்துபோகும் இலங்கையின் கொள்கைக்கு அமைய இலங்கை அண்மையில் அடைந்துவரும் முன்னேற்றம் பற்றி பேரவையில் இலங்கைத் தூதுவர் எடுத்துரைத்தார்.

இலங்கையின் ஜனநாயக முறையின் கீழ் சிறப்பு அண்மையில் நடந்த மாகாணசபை தேர்தல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

நல்லிணக்க செயற்பாட்டில் சகல சமுதாயங்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இலங்கை மக்கள் தமது பூரண ஆதரவை இத்தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.