செவ்வாய், 4 செப்டம்பர், 2012

படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்!

தென்மராட்சிப் பிரதேசத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விரைவில் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என குறித்த பிரதேசத்தின் 523 ஆம் படையணியின் கட்டளைத் தளபதி கேணல் விஜயசூரிய உறுதியளித்தார்.

தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (03.09.2012) திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில், தென்மராட்சிப் பிரதேசத்தில் பொதுமக்களிற்குச் சொந்தமான காணிகள் மற்றும் பாடசாலைகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைந்துள்ளமை தொடர்பாக பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிக்கும் திட்டம் படையினருக்கு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தனியார் காணிகளை கையளிப்பதற்கு இந்தப் பிரதேசத்திலுள்ள அரச காணிகளை படையினருக்கு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அரச காணிகள் தமக்கு கிடைத்தவுடன் தனியாருக்குச் சொந்தமானகாணிகள் யாவும் அவர்களிடம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் ஆரம்ப கட்டமாக படையினரின் பாவனையிலுள்ள மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலைக்குரிய காணியிலிருந்து செப்டெம்பர் இறுதிக்கிடையில் படையினர் வெளியேற்றப்பட்டு, பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்படும் எனவும், இதேபோல் கரம்பகம் அ.த.கபாடசாலையிலுள்ள படையினரின் பயிற்சி முகாமும் அகற்றப்பட்டு அந்தப் பகுதியிலுள்ள வெடிபொருட்கள் மீட்கப்பட்டதன் பின்னர் காணி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தளபதி கேணல் விஜயசூரிய உறுதியளித்தார்.

இதேபோல் கொடிகாமம் இராமாவில் நலன்புரி முகாமின் பகுதியில் இருக்கும் படையினர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு முகாம் அமைந்திருந்த பகுதி மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.